கொழுந்தியாளை திருமணம் செய்ய மனைவியை கொன்ற தொழிலாளி..!!
திருவட்டாரை அடுத்த வேர்க்கிளம்பி, முண்ட விளையைச் சேர்ந்தவர் டேவிட்சாமுவேல்(வயது31). இவர் பிளம்பிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹெப்சிபாய்(26). இருவருக்கும் திருமணமாகி 1¾ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை.
இந்த நிலையில் ஹெப்சி பாயின் தாயார் சமீபத்தில் இறந்து போனார். இதனால் ஹெப்சிபாயின் சகோதரி, ஹெப்சிபாய் வீட்டுக்கு வந்தார். அங்கேயே தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹெப்சிபாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கணவர் டேவிட்சாமுவேல் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றார். அங்கு ஹெப்சி பாய்யை பரிசோதித்த டாக்டர் கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஹெப்சிபாயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஹெப்சிபாய் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பட்டாணி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ஹெப்சிபாயின் கணவர் டேவிட்சாமுவேலையும் பிடித்து விசாரித்தார்.
அப்போது அவர் மனைவியை கழுத்தை நெறித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
ஹெப்சிபாயின் சகோதரி எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். எனக்கும் ஹெப்சிபாய்க்கும் குழந்தைகள் இல்லாததால் நான் ஹெப்சிபாயின் சகோதரியை திருமணம் செய்ய விரும்பினேன். இதற்கு ஹெப்சிபாய் மறுத்தார். எனவே அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றேன். கொலையை மறைக்க உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதை டாக்டர்கள் கண்டு பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து டேவிட் சாமுவேல் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைதான டேவிட்சாமுவேல் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Average Rating