திருப்பூரில் மூதாட்டியை கொன்று நகை- பணம் கொள்ளை…!!
திருப்பூர் வீரபாண்டி இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பாலாமணி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
பாலாமணி 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். மகன் மற்றும் மகளுடன் பாலாமணி அதே வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் தீபாவளியையொட்டி மகன், மருமகள் அவரவர் மாமியார் வீட்டுக்கு சென்று விட்டனர். தனியே இருந்த பாலாமணி நேற்று தீபாவளியை கொண்டாடி விட்டு இரவு தூங்கினார்.
இன்று அதிகாலை ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. சத்தம் கேட்டு எழுந்த பாலாமணி கொள்ளையர்களை வீட்டுக்குள் நுழைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டார்.
ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் மூதாட்டியை பலமாக சுவற்றில் தள்ளி விட்டனர். சுவற்றில் மோதிய பாலாமணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தனர். அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர்.
கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்றபோது அங்கு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலாமணியை கொன்று கொள்ளையடித்த காட்சிகள் அனைத்தும் அதில் பதிவாகியிருந்தன.
கொள்ளையர்கள் கேமிராவில் பதிவான ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச்சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் பாலாமணியின் வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பாலாமணி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பாலாமணியின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பதிவான கைரேகைளையும் பதிவு செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாமணி தனியே இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று கூறினர்.
மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating