கடலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து: கணவன் உடல் கருகி பலி…!!
கடலூர் கூத்தப்பாக்கம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவர் கடலூர் லாரன்ஸ் சாலை ரெயில்வே கேட் அருகில் நகராட்சி மருத்துவமனைக்கு எதிரே சாலையோரத்தில் தள்ளுவண்டியில் குளிர்பான கடை நடத்தி வந்தார். அவரது மனைவி வேணியும்(40) வியாபாரத்தை கவனித்து வந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி கணவன்-மனைவி இருவரும் நாட்டு வெடிகளை கடையில் விற்பனை செய்தனர். மாலை 6 மணியளவில் திடீரென்று கடையில் இருந்த வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பட்டாசு கடை தீ பிடித்து எரிந்தது. அப்போது தீ மளமளவென அருகில் இருந்த பாய் வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைகள் மீதும் பரவியது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மகாலிங்கமூர்த்தி தலைமையில் நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஜெயபால், அவரது மனைவி வேணி, பாய்வியாபாரம் செய்து கொண்டிருந்த சுப்பிரமணி(50), ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார்(22) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஜெயபால், வேணி இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர்களின நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயபால் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி வேணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெயபாலுவும், அவரது மனைவி வேணியும் நாட்டு வெடிகளை வியாபாரம் செய்தபோது கொசுத்தொல்லை இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்த கொசுவர்த்தியை கொளுத்தி வைத்துள்ளனர்.
இதில் இருந்த நெருப்பு பொறிகள் நாட்டு வெடிகள் மீது விழுந்து இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating