வவுனியாவில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் பற்றி எரிந்த வர்த்தக நிலையம்! பொலிஸாரின் வருகை தாமதம்..!!
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள இலத்திரனியல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று மதியம் 11.30 மணியளவில் ஏற்பட்ட இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – செட்டிகுளம் பிரதான வீதியில் உள்ள இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்திருந்த ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
பிரதி எடுக்கும் இயந்திரம், புகைப்படக் கருவிகள், பலசரக்கு பொருட்கள் என்பவற்றைக் கொண்டதாக குறித்த வர்த்தக நிலையம் காணப்பட்டது.
தீ விபத்து காரணமாக சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முழுமையாக தீயில் எரிந்துள்ளன.
காலையில் கடையை திறந்த அதன் உரிமையாளர் சிறிது நேரத்தின் பின் வர்த்தக நிலையத்தை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் மரணச் சடங்கிற்கு சென்ற நிலையிலேயே இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் பாரிய சத்தத்துடன் வெடித்து எரிவதைக் கண்ட அயலவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் பொருட்கள் அனைத்தும் எரிந்து முடிந்த நிலையிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த தீ விபத்து ஏற்பட்டவுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்வரை பொலிஸார் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating