சென்னை ரெயிலில் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள் – போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்கள்…!!
கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந் தேதி சென்னை, சென்டிரல் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கரவாதிகளில் மெகபூப், ஜாகீர் உசேன் என்ற 2 பயங்கரவாதிகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டிருந்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் போபாலுக்கு சென்று மேற்கண்ட 2 பயங்கரவாதிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவதற்குள் தற்போது துப்பாக்கி சூட்டில் பலியாகிவிட்டனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:-
சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் முகமது இஜாஜூதீன், மெகபூப், ஜாகீர் உசேன் ஆகிய 3 பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை தேடிவந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமது இஜாஜூதீன் தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்.
அதன்பிறகு ஜாகீர் உசேன், மெகபூப் ஆகிய இருவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் 3 முறை போபால் சென்று விசாரித்து வந்தனர். சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதை விசாரணையில் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்து சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து வந்தநிலையில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர். சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர். எனவே அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிடும்.
போபாலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அங்குள்ள போலீசாரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை பெற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் முறையாக மனு தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வரும். சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேர் மீதும் இந்தியா முழுவதும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating