விமானங்களை தகர்க்க சதி லண்டனில் கைதானவர்களில் ஒருவர் இந்தியப்பெண்
விமானங்களை தகர்க்க நடந்த சதி தொடர்பாக கைதான 24 பேரில் 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அவர்களில் 2 பேர் கணவன்-மனைவி என்பது தெரியவந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் 10 விமானங்களை தாக்கி அழிக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருந்தனர். விமானங்களில் திரவ வடிவிலான வெடி பொருள்களை எடுத்துச்சென்று அவற்றை செல்போன் வெடிக்கச்செய்ய அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்த தகவல் லண்டன் போலீஸ் உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரியவந்ததால் அவர்கள் முறியடித்து விட்டனர்.
இது தொடர்பாக பல இடங்களில் சோதனை நடத்தி 24 தீவிரவாதிகளை கைது செய்தனர். சதியில் தொடர்பு இல்லை என்று கூறி ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்ற 23 பேரில் 3 பேர் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கணவன்-மனைவி
கைதானவர்களில் வயதில் மிக இளையவரான அப்துல் படேல் வெளிநாடு வாழ் இந்தியரின் மகன் ஆவார். இவரது மனைவி சூபியாவும், மாமனாரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைதான 23 பேரில் 19 பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. அப்துல் படேலின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. ஆனால் சூபியாவின் சொத்தும், அவரது தந்தையின் சொத்தும் முடக்கப்படவில்லை.
இந்த 3 பேர் தவிர, இன்னொரு இந்தியரும் பிடிபட்டு இருக்கிறார். அவர் பெயர் தாரிக், அவர் ஜெட் ஏர்வேஸ் விமானக் கம்பெனியில் வேலைபார்த்து சஸ்பெண்டு செய்யப்பட்டவர். இந்த 23 பேரும் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.