பொள்ளாச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 பெண்கள் பலி…!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் கோபால்சாமி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி பாலாமணி (வயது 57). இவர்கள் வீட்டில் 2 ஆடுகளை வளர்த்து வந்தனர். ஆடுகளுக்கு இலை பறிக்க பாலாமணி தனது உறவினரின் தோட்டத்துக்கு நேற்று மதியம் சென்றார்.
அப்போது அவருடன் அதே பகுதியை சேர்ந்த பாக்கியம் (50), மல்லிகா (45) ஆகியோரும் சென்றனர். தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ தரைமட்ட கிணற்றின் அருகே வளர்ந்து இருந்த இலைகளை பாலாமணி பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியம் பாலாமணியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மல்லிகா இதுகுறித்து பாலாமணியின் கணவர் கோபால்சாமிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். பாலாமணியும், பாக்கியமும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர்.
மல்லிகாவுக்கு நீச்சல் தெரியாததால் அவர்களை காப்பாற்ற கிணற்றில் உள்ள படிகட்டுகள் வழியாக சென்றார். அப்போது அவரும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
கோபால்சாமியும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு சென்று பார்த்தபோது 3 பெண்களும் தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் 3 பேரின் உடல்களை மீட்டனர்.
பின்னர் அவர்களுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating