கணவர் வரதட்சணை கேட்டதால் குழந்தையை கொன்று பெண் தற்கொலை…!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது கரைப்பாளையம். இங்குள்ள உப்பிலியங்காட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). விவசாயி. இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் மணிகண்டன் என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.
கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த சுதா நேற்று கைக்குழந்தை மணிகண்டனை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார். பின்னர் சுதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சுதாவின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர். ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய்- குழந்தையின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுதாவின் பெற்றோர் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளிடம் அவரது கணவர் கடந்த சில நாட்களாகவே கூடுதல் வரதட்சணையாக பொக்லைன் எந்திரம் வாங்கி தரவேண்டும் என்று கொடுமை படுத்தியுள்ளார்.
ராமசாமியின் கொடுமை தாங்க முடியாமல் தான் கைக்குழந்தையை கொன்று சுதா தற்கொலை செய்து கொண்டார். எனவே ராம சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதாவின் இந்த விபரீத முடிவுக்கு கணவரின் வரதட்சணை கொடுமை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ. கிருஷ்ணன் இன்று விசாரணை தொடங்கியுள்ளார். விசாரணைக்கு பின்னரே கைக்குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தெரியவரும்.
Average Rating