மேற்கு மாம்பலத்தில் பெண் வக்கீலை கொன்ற மர்ம வாலிபர் யார்?: கைது செய்ய போலீஸ் தீவிரம்…!!
சென்னை மேற்கு மாம்பலம் முத்தாளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) என்கிற பெண் வக்கீல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.
கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்த இவர் தனியாகவே வசித்து வந்தார். லட்சுமி சுதாவின் மகன் கார்த்திகேயன் பெங்களூரில் உள்ளார்.
வக்கீல் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு அவரது தங்கை வித்யா அடிக்கடி வந்து செல்வார். நேற்று மாலையில் அவர் வந்து பார்த்த போது வெளிப்பக்கமாக வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து குமரன் நகர் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் வக்கீல் லட்சுமிசுதா கத்தி குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் காணப்பட்ட அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
லட்சுமி சுதாவை கொலை செய்த வாலிபர், அவருக்கு நன்கு தெரிந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். இதன் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி அன்று மர்ம வாலிபர் ஒருவர் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்தது. அந்த வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவர் லட்சுமி சுதாவுக்கு நன்கு அறிமுகமான நபராகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இவர்தான் லட்சுமி சுதாவை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
அந்த வாலிபர் லட்சுமி சுதாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதையோ எதிர்பார்த்து அந்த வாலிபர் வந்துள்ளார் என்றும், அது கிடைக்காததால் அவர் லட்சுமி சுதாவை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மாயமான வாலிபர் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
இதேபோல் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் மூதாட்டி சாந்தி கொலையிலும் துப்பு துலங்கி வருகிறது. கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தென் சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Average Rating