ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது…!!
பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்து உள்ள ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படத்திற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் அந்த படம் எந்த பிரச்சினையும் இன்றி திரைக்கு வந்தது.
இந்தநிலையில், கல்யாணில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளதை கண்டித்து நேற்று சம்பாஜி பிரிக்கேட் என்ற அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 10 பேர் திரண்டு வந்து தியேட்டரின் டிக்கெட் கவுண்ட்டர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தின் போஸ்டர்கள் மீது கருப்பு மையை பூசியும், தீ வைத்து கொளுத்தியும் ‘பாகிஸ்தான் ஒழிக’ என கோஷங்கள் எழுப்பினார்கள்.
சம்பாஜி பிரிக்கேட் அமைப்பினரின் திடீர் தாக்குதல் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கல்யாண் போலீசார் அந்த அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating