சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது…!!
திருச்சி வரகனேரி துரைசாமிபுரத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 178 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் பயன்படுத்தப்படாத கட்டிட தரைதளத்தில் கிழக்கு பக்க சுவரில் குறிப்பிட்ட பகுதி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இரவு இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சுவர் இடிந்து விழுந்த இடத்தை கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டார். மேலும் இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடத்தினை மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் இடிக்க அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த கட்டிடத்தில் தரைதளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் ஆகியவற்றில் ஒரு பகுதியை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக மேல் தளத்தில் இருந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை பள்ளி நிர்வாகம் தரப்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த வகுப்புகள் அருகில் உள்ள தேவாலயத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. கட்டிடம் இடிக்கும் பணி அடுத்த வாரத்திற்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை தேவாலயத்தில் இயங்கி வரும்.
Average Rating