சிறுநீரக மோசடி – மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த இந்தியர்கள் செய்த காரியத்தால் பரபரப்பு..!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எழுவரும் தப்பிவிட்டனர் என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்தியர்களே இவ்வாறு தப்பியுள்ளனர் என்று கொழும்பு விளக்கமறியல் சிறைக்காவலர், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கு, நேற்றுச் செவ்வாய்கிழமை கொண்டுவந்தார்.
மிகவும் திட்டமிட்ட முறையிலேயே அவ்வனைவரும் தப்பிச்சென்றுள்ளனர் என்றும் சிறைக்காவலர் சுட்டிக்காட்டினார்.
இந்த இந்தியப்பிரஜைகள் ஏழுபேரும், விஷேடமான பாதுகாப்பின் கீழ் தடுத்துவைக்குமாறு, நீதிமன்றத்தின் ஊடாக விசேட கட்டளை விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்வனைவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்தவிவகாரம் தொடர்பில், தெளிவுபடுத்துவதற்கு எதிர்வரும் 24ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மிரிஹான தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ள பிரதான நீதவான், தப்பியோடிய இந்தியப்பிரஜைகள் எழுவருக்கும் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் காரணத்தை தெரிவிக்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரையும் அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுநீரக மோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த முதலாவது சந்தேகநபரான லக்ஷ்மன் குமார் என்பவர், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதியன்று தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுநீரக மோசடி விவகாரம் தொடர்பில் இந்தியப்பிரஜைகள் எண்மரும் வெள்ளவத்தையில் வைத்து ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டு பேரில் அறுவரின் சிறுநீரகங்களே அகற்றப்பட்டுள்ளன என்று சோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி இந்தியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஒரு சிறுநீரகத்தை ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்க்கு தாங்கள் விற்றதாகவும், இருப்பினும் அந்தத் தொகை இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொலிஸார், நீதிமன்றத்தில் ஏற்கெனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating