ஓடும் பஸ்சில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே பாடகம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமார் (வயது 28). இவருடைய மனைவி சத்யா (24). இருவரும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தலை பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடகம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து உள்ளார்.
போளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் பரிசோதனை, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் மேல்மலையனூரில் உள்ள கணவனை பார்ப்பதற்காக சத்யா போளூரில் இருந்து அரசு பஸ்சில் சேத்துபட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
பஸ், சேத்துப்பட்டு அருகே சென்று கொண்டு இருந்த போது சத்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்சில் இருந்த ஆண்கள் இறங்கினார்கள். இதனையடுத்து பெண் பயணிகள் சிலர் பஸ்சில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். டிரைவர் பஸ்சை மெதுவாக கொண்டுசென்று சேத்துப்பட்டு அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தினார். அதற்குள் சத்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் பெண்கள் மருத்துவமனைக்கு சென்று தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து செவிலியர்கள் சென்று சத்யாவையும், குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் ½ மணி நேரம் கழித்து மீண்டும் சத்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் தொடர் சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சத்யாவையும், 2 குழந்தைகளையும் அனுப்பி வைத்தனர்.
Average Rating