தேனி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை…!!
தேனி அருகே உள்ள ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. அவரது மனைவி தமிழரசி(வயது30). இவர்களுக்கு பிரவீன்(6), அனு(2) ஆகிய குழந்தைகள் உண்டு. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தாலும் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்தது. நேற்று இரவும் வழக்கம்போல் வீட்டில் பிரச்சினை வெடித்தது. இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்வதென தீர்மானித்தார்.
தான் மட்டும் தற்கொலை செய்தால் குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிவிடுமென பயந்துபோனார். எனவே குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்றிரவு வீட்டைவிட்டு தமிழரசி 2 குழந்தைகளுடன் வெளியேறினார். அந்த ஊரில் உள்ள சரவணன் என்பவரது கிணற்றில் 2 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்தார்.
இன்று காலை அந்தவழியாக வந்தவர்கள் 3 பேர் பிணமாக கிணற்றில் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.
3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating