தம்பதி மீது துப்பாக்கி சூடு: பஸ் அதிபர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்…!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜ் (வயது 45). மினி பஸ் உரிமையாளரான இவரது மகள் கவிதாவும் (20), அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருடைய மகன் முத்துவும் (27) காதலித்து வந்தனர். முத்து மும்பையில் வேலை செய்து வந்தார். இந்த காதலுக்கு கவிதாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் நேற்று குமாரபுதுக்குடியிருப்பு கிராமத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு மும்பையில் இருந்து முத்து வந்திருந்தார். திருமணத்துக்கு கவிதாவின் தந்தை ராஜூவும் சென்றிருந்தார். அங்கு சிலர் கவிதா குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ் வீட்டுக்கு வந்தார். உடனே அவரும், அவருடைய தம்பி சேகர் (40), மகன் மைக்கேல் சிம்சன் (20) ஆகிய 3 பேரும் முத்துவைத் தேடிச் சென்றனர். அப்போது முத்துவின் தந்தை குமார், தாயார் சுசீலா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை ராஜ் தரப்பினர் வழிமறித்து தகராறு செய்தனர். வாக்குவாதம் ஏற்பட்டதால் சுரேஷ் என்பவர் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றார்.
அப்போது மைக்கேல் சிம்சன் தான் வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியால் சுட்டார். அதில் இருந்து பாய்ந்த குண்டுகள் குமாரின் வயிற்றுப் பகுதியிலும், சுசீலாவின் இடது கையிலும் துளைத்தன. இருவரும் காயம் அடைந்து அலறினார்கள். மேலும் சமரசம் செய்ய முயன்ற சுரேசை 3 பேரும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த குமார், சுசீலா, சுரேஷ் ஆகியோர் வள்ளியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் தலைமறைவான ராஜ் உள்பட 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் 3 பேரையும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Average Rating