இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் கடும் சண்டை
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இலங்கைப் படையினரும் விடுதலைப் புலிகளும் பரஸ்பர எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும் போர்முனை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடா பகுதியின் கிளாலி, எழுதுமட்டுவாள், முகமாலை ஆகிய பகுதிகளிலும் பலாலி பகுதியிலும் இந்த எறிகணை வீச்சுக்களுடன் கூடிய மோதல்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல்வேளையில் போர்முனை பகுதிகளில் அமைதி நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் பகுதியில் புதன்கிழமை இரவு 10மணி அளவில் கடலோரப்பகுதி வழியாக கிளாலிக்கு வந்து தாக்குதலை நடத்த விடுதலைப்புலிகள் முயன்றதாகவும் அந்த தாக்குதலை அரசப்படையினர் முறியடித்து விட்டதாகவும் இலங்கைஅரசு தெரிவிக்கிறது.
இந்த தாக்குல் நடைபெற்ற கிளாலி பகுதியிலும் 70க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடக்கின்றன. எங்கள் துருப்புக்கள் அந்த உடல்களை சேகரித்து யாழ்.மருத்துவமனையில் ஒப்படைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் அதுல ஜெயவர்தனா தெரிவித்தார். யாழில் தற்போது நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார். யாழ் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
ஆனால், யாழ்ப் பகுதியில் இன்று நடைபெற்ற சண்டை குறித்து கருத்து வெளியிட்ட விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன், தாங்கள் கிளாலி பகுதியில் படையினர் மீது கடும்தாக்குதலை மேற்கொண்டதாகவும், படைத் தரப்பினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதியன்று யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்களில் தங்களது தரப்பில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.