கொடைக்கானலில் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவர்-டிரைவர் பலி…!!
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 21 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வட்டக்கானல் பகுதியில் உள்ள காட்டேஜ்களில் தங்கினர். இதில் ஒரு காட்டேஜில் தங்கியிருந்தவர்கள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் மற்ற மாணவர்கள் அங்கு சென்று கதவை தட்டினர். பதில் இல்லை. இதையடுத்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு மாணவர் தாமஸ் (வயது 21). டிரைவர் ஜிவின் (40) ஆகியோர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மாணவர்கள் மெல்வின், அனில், வினு ஆகியோர் மயங்கி கிடந்தனர். அவர்களை உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட்டக்கானல் பகுதியில் போதைக்காளான் விற்பனை ரகசியமாக நடைபெற்று வருகிறது. அதனை வாங்கி தின்றதால் அவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கு தந்தூரி சிக்கன் சமைத்து மது அருந்தி சாப்பிட்டுள்ளனர். காட்டேஜ் கதவு ஜன்னல்களை மூடிக் கொண்டு சமைத்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சு திணறி இறந்தார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து டி.எஸ்.பி. சந்திரன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating