பல்லடத்தில் பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்…!!
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மாலா (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலை தேடி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராசாகவுண்டம் பாளைத்தில் குடியேறினர். இவர்களுக்கு பரசுராமன் (3) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் மாலா கர்ப்பமானார். கடந்த 31-ந்தேதி பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் மாலாவுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு பின்னர் மாலா குழந்தையுடன் வீடு திரும்பினார்.
மாலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மீனா. இவரது வீட்டிற்கு மீனாவின் தங்கை செல்வி அடிக்கடி வந்துசெல்வார். செல்வி ஈரோட்டை சேர்ந்தவர். அப்போது மாலாவுக்கும் செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாலாவின் குழந்தையை பார்க்க செல்வி வீட்டுக்கு வந்தார். அப்போது செல்வியிடம் குழந்தையை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு மூத்த மகனுடன் மாலா அங்குள்ள மளிகை கடைக்கு சென்றார்.
சிறிது நேரத்துக்கு பின்பு திரும்பி வந்து பார்த்தபோது செல்வி மற்றும் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தையையும் காணவில்லை. குழந்தையை செல்வி திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த மாலா இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வியை தேடி ஈரோட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட முகவரி போலி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து தனிப்படை போலீசார் குழந்தையை தேடி வருகிறார்கள். பிறந்து 13 நாட்களே ஆன குழந்தையை கடத்திச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating