ஆசிரியை தாக்கியதில் மாணவி கை உடைந்தது: மனித உரிமை கமிஷன் விசாரணை…!!
திருவனந்தபுரம் அருகே இரவிபுரம் என்ற இடத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
பாலத்துக்கல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் ராஜி (வயது 10) என்ற சிறுமி இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாணவி ராஜி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று இருந்தார். வகுப்பில் அறிவியல் ஆசிரியை ஷிஜா என்பவர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.
ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவி ராஜியின் பேனா கீழே தவறி விழுந்ததால் அவர் கீழே குனிந்து பேனாவை தேடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஆசிரியை தான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அதை கவனிக்காமல் மாணவி ராஜி கீழே குனிந்து விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த மாணவியின் கையை மேஜை மீது வைத்து ஸ்கேலால் தாக்கினார். இதில் மாணவி ராஜி கை எலும்பு முறிந்ததால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு மற்ற வகுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்தனர். நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவி ராஜியை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தகவல் மாணவி ராஜியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் அங்கு சென்று மகளின் நிலையை பார்த்து கண்ணீர் விட்டனர். மேலும் கல்வி அதிகாரிகளுக்கும் இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி ஆசிரியை ஷிஜாவை சஸ்பெண்டு செய்தனர். மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஆசிரியை ஷிஜா பள்ளியில் இருந்து சென்றவர் அதன் பிறகு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில் மாநில மனித உரிமை கமிஷனிலும் மாணவியை ஆசிரியை தாக்கியதில் அவரது கை உடைந்தது பற்றி புகார் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி மனித உரிமை கமிஷனும் விசாரணை நடத்தி வருகிறது.
Average Rating