திண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…!!
கோவையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கோவிலில் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராஜகோபால் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் ராஜகோபால் மற்றும் இந்துமதி திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்து விட்டு காரில் அவர்கள் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் இரவு வந்து கொண்டிருந்தபோது கலிக்கம்பட்டி பிரிவு அருகே எதிரேவந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் காருக்குள்ளேயே நசுங்கி படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று காலை சீனிவாசன் மற்றும் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுமண தம்பதிகளான ராஜகோபால் மற்றும் இந்துமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இரு வீட்டார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Average Rating