காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் ஆத்திரம்…!!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ராஜ கோபாலன் பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் புவனேஸ்வரி(வயது15). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் நவீன்குமார்(18) தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நவீன்குமார், புவனேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனை அவர் ஏற்கவில்லை.
நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த புவனேஸ்வரியை மறித்த நவீன்குமார் மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுக்கவே மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரியின் கழுத்து பின்பகுதியில் குத்தினார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் நவீன்குமார் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை அப்பகுதி மக்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய நவீன்குமாரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating