புதுவை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் பலி…!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (வயது 60). இவரது மனைவி கங்காபாய் (56). இவர்களுடைய மகன் ரோகினிகுமார் (35).
ஆஞ்சநேயலு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. எனவே, புதுவை தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அவர் முடிவு செய்தார்.
அதை தொடர்ந்து நேற்று இரவு ஆஞ்சநேயலு, தனது மனைவி கங்காபாய், மகன் ரோகினிகுமாருடன் சேர்ந்து புதுவைக்கு காரில் புறப்பட்டார். டிரைவர் மோகனகிருஷ்ணன் அந்த காரை ஓட்டினார்.
இன்று காலையில் புதுவை அருகே உள்ள கிளியனூர் பகுதியில் வந்தபோது, திடீரென அந்த கார் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில், படுகாயம் அடைந்த ஆஞ்சநேயலு மற்றும் அவரது மகன் ரோகினிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கங்கா பாய், கார் டிரைவர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
விபத்தை அறிந்த அப்பகுதியினர் ஓடி வந்தனர். காயம் அடைந்த கங்காபாயையும், மோகன கிருஷ்ணனையும் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கங்காபாய் பரிதாபமாக இறந்தார். மோகனகிருஷ்ணன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் மற்றும் கிளியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஆஞ்சநேயலு, ரோகினி குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சேதம் அடைந்த கார் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
விபத்து பற்றி கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating