திருச்செந்தூர் அருகே தொழிலாளி கொலை: கைதான மனைவி வாக்குமூலம்…!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு புதுகாலனியை சேர்ந்தவர் சங்கிலி மாடன்(வயது 36), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர் பக்கத்து ஊரான பிச்சிவிளை புதுகிணத்தான்விளையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு தினேஷ்(16), முகேஷ்(10), ராஜேஷ்(8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் சங்கிலி மாடனை சாந்தி அரிவாளால் வெட்டிக் கொன்றார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட சங்கிலி மாடனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது.
சாந்திக்கும், பிச்சுவிளையை சேர்ந்த முடிசூடும் பெருமாள் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவியின் கள்ளக் காதலை கண்டித்ததால் சங்கிலிமாடன் தனது மனைவியாலேயே வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கைதான சாந்தி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
எனக்கும் பிச்சிவிளையை சேர்ந்த முடிசூடும்பெருமாள் என்பவருடன் தொடர்பு இருந்துவந்தது. அவருடன் நான் பழகுவதை அறிந்த எனது கணவர் கண்டித்தார். இதனால் எங்கள் இருவருக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவிலும் சங்கிலிமாடன் என்னிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனது கணவர் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தூங்கச்சென்றுவிட்டார்.
அவர் தூங்கும் போது அவரது தலையணையின் அடியில் என்னை வெட்டிக் கொல்வதற்காக அரிவாளை மறைத்துவைத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்த நான் தூங்கினால் தன்னை கணவர் எப்படியும் வெட்டிக்கொன்றுவிடுவார் என பயந்து தூங்காமல் இருந்தேன். நள்ளிரவு 1மணியளவில் நான் எழுந்து நைசாக கணவரின் தலையணையில் இருந்த அரிவாளை எடுத்து அவரை கழுத்தில் சரமாரியாக வெட்டிக்கொன்றேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான சாந்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating