குலசேகரத்தில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளி பலி: போலீஸ் விசாரணை…!!
குலசேகரம் திருநந்திக்கரையைச் சேர்ந்தவர் விஸ்வம்பரன் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர்.
இவர், தற்போது குலசேகரத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து இரவு பணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
நேற்றிரவு விஸ்வம்பரன் பணியில் இருந்தார். இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்குள் அவர், பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
குலசேகரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பிணமாக கிடந்த விஸ்வம்பரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பிரேத பரிசோதனையில்தான் தெரியவரும்.
இது குறித்து அவரது மனைவி சுஜா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான விஸ்வம்பரனுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
Average Rating