கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
கிழக்கு லெபனானில் பெக்கா பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இஸ்ரேலிய விசேட படைகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை நடத்தியுள்ளார்கள். ஐ.நா வின் போர் நிறுத்தம் திங்கட்கிழமையன்று அமலுக்கு வந்த பின்னர், நடைபெற்ற பாரிய சம்பவம் இது. ஹெஸ்பொல்லாக்களின் வலுவான இடமான இந்தப் பகுதி பால்பெக் பகுதிக்கு வெளியே இருக்கின்றது.
அந்தப் பகுதிக்குச் சென்ற செய்தியாளர் ஒருவர், மலைகளில் இருந்து கவச வாகனங்களில் வந்த இஸ்ரேலிய துருப்புக்கள் ஹெஸ்பொல்லா படைகளுடன் இரண்டரை மணி நேரத்திற்கு போரிட்டதாகவும், அதன் பின்னர், அவர்கள் போர் விமானங்களின் பாதுகாப்போடு, ஹெலிகாப்டர்கள் மூலமாக வெளியேறியதாகவும் கிராமவாசிகள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இருக்கும் இரத்தக் கறைகள் மற்றும் மருத்துவ துணிகள், அங்கு அவசர அவசரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டதினை உறுதி செய்துள்ளன. இந்த நடவடிக்கையில் தனது இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, இருவர் காயம் அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.