இஸ்ரேலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதா
லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபிஅணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இஸ்ரேல் போர்நிறுத்த தீர்மானத்தை மீறிவிட்டதாகவும் அவர் கூறினார். லெபனான் நாட்டின் மீது முதலில் விமானத்தாக்குதலும், பிறகு தரைப்படைத் தாக்குதலும் நடத்தி தெற்கு லெபனான் நாட்டையும், பெய்ரூட் நகரையும் இஸ்ரேல் தரைமட்டமாகி விட்ட நிலையில் போர்நிறுத்தம் செய்யக்கோரும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு லெபனான் ராணுவம் இருநாடுகளின் எல்லையில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இஸ்ரேல் ராணுவம் அங்கு இருந்து வாபஸ் ஆனது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் திடீர் என்று லெபனான் நாட்டின் மீது மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு சிரியா வழியாக ஈரனில் இருந்து ஆயுதங்கள் சப்ளை ஆனதாகவும் அதைத்தடுப்பதற்காகத்தான் விமானத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் விளக்கம் அளித்தது. அரசாங்கம் அங்கீகரிக்காத ஆயுத இறக்குமதி தடைசெய்யப்படவேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கூறுகிறது என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
கண்டனம்
இஸ்ரேல் மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கோபி அணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
கிழக்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏற்பட்டு இருக்கும் அமைதிக்கு ஆபத்தாக முடியும். அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். ஆயுதத் தடையை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்கவேண்டும். இஸ்ரேல் நடத்திய இந்த விமானத்தாக்குதல் போர்நிறுத்தத்தை மீறிய செயலாகும். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இது லெபனான் அரசின் அதிகாரத்தை அபகரிக்கும் செயலாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கோபிஅணன் கூறி இருந்தார்.
அதோடு அணன் லெபனான் பிரதமர் சினியோராவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.