நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்…!!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ‘லயோலா கல்லூரி’ வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையுடன் வரும்படி நடிகர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், திடீரென, லயோலா கல்லூரி தங்கள் வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த அளித்திருந்த அனுமதியை ரத்து செய்தது. இதனை காரணம் காட்டி, காவல்துறையும் அங்கு பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது.
இதனால் அதிச்சி அடைந்த நடிகர் சங்க நிர்வாகிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்த முடிவு செய்தனர்.
இதுபற்றி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இன்று மாலை நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாளை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் வைத்து மிகப்பெரிய அளவில் காவல் துறையின் பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதன் முறை. பொது குழு ஏற்கனவே கூறியது போல் அதே நேரத்தில் நடைபெறவுள்ளது.
பொது குழு கூட்டம் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறாததற்கு போதுமான பாதுகாப்பு இல்லாதது தான் காரணம். மற்றும் இதில் சங்க நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் இருந்து வந்து கலந்து கொள்ளவுள்ளனர். இப்பொதுக்குழுவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating