குஜராத்: 14 கிலோ தங்கம் கொள்ளையில் அக்காள்- தம்பி கைது…!!
குஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த 14 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர். 100 கிராம் எடையுடைய 140 தங்கக் கட்டிகளை கொள்ளையடித்தனர்.
கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று தெரிகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் அக்காள்- தம்பி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒரு அபார்ட்மென்டில் மறைந்திருந்த அவர்களை போலீசார் இன்று கைது செய்தனர். அத்துடன் 13.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘‘அந்த பெண்ணின் பெயர் பிங்கி பாக்சந்தானி (25) என்றும், அவரது சகோதரர் பெயர் சாகர் (20) என்றும் தெரிய வந்துள்ளது. சாகர் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பிங்கி பி.காம் படித்தவர். திருமணம் ஆகி கடந்த வருடத்தில் விவாகரத்து பெற்று பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் அடிக்கடி பாருக்குச் சென்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதன் காரணமாக 11 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒருவரிடம் 10 முதல் 12 சதவீத வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை கட்ட முடியாததால் 50 சதவீதம் அபராதத்துடன் கட்ட பணம் கொடுத்தவர் வற்புறுத்தியுள்ளார். அத்துடன் சொகுசு வாழ்க்கை வாழவும் பணம் தேவைப்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பெரிய நிதிநிறுவத்தில் கொள்ளை அடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிதிநிறுவனத்தில் கொள்ளையடிப்பதற்கு ஓரிரு நாளைக்கு முன் மற்றொரு நிதிநிறுவத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்பதால், தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடித்த தங்கத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பாலான தங்கத்தை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக கொடுத்துள்ளனர். அதேபோல் கடன் வாங்கியவரிடமும் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் போலீசார் பிடியில் சிக்கிக்கொண்டனர்’’ என்று தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating