எகிப்து நாட்டில் ரெயில்கள் மோதலில் 80 பேர் சாவு
எகிப்து நாட்டில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொண்டதில் 80 பேர் பலியானார்கள். மோதிய வேகத்தில் ஒரு ரெயில் தடம் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. எகிப்து நாட்டில் மன்சுரா என்ற ஊரில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி ஒரு ரெயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் மற்றொரு ரெயில் பெனா என்ற ஊரில் இருந்து கெய்ரோ நோக்கி அதே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் கெய்ரோவுக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள கல்யோப் என்ற ஊரில் 2 ரெயில்களும் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ரெயிலின் பின்புறத்தில் பின்னால் வந்த ரெயில் மோதியது.
தலைகுப்புற கவிழ்ந்தது
மோதிய வேகத்தில் ஒரு ரெயில் தடம் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த ரெயில் 4 பகுதிகளாக உடைந்து சிதறியது. அதில் தீப்பிடித்து கொண்டது. ரெயில் பெட்டிகள் நசுங்கி சின்னாபின்னம் ஆயின. ஒரு ரெயிலின் டிரைவர், சிக்னலை கவனிக்காமல் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
80 பேர் சாவு
இந்த கோர விபத்தில் 80 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள், உருக்குலைந்து கிடந்த ரெயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்டன. இந்த விபத்தில் 131 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்புலன்சுகள் விரைந்தன
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு டாக்டர்கள் மற்றும் மீட்பு படையினரை ஏற்றிக்கொண்டு 25 ஆம்புலன்சுகள் விரைந்தன. மேலும், ரெயில் பயணிகளின் உறவினர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையில் விபத்து பகுதியில் குவிந்தனர்.
எகிப்து நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மோசமான ரெயில் விபத்தில் 360 பேர் பலியானார்கள். அதையடுத்து நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து இதுவே ஆகும்.