உக்ரைன் நாட்டில் ரஷிய விமானம் நொறுங்கி விழுந்து, 171 பேர் சாவு
உக்ரைன் நாட்டில், ரஷிய விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் 171 பேர் இறந்தனர்.ரஷியாவில் கருங்கடல் பகுதியில் உள்ள சுற்றுலா இடமான அனபா என்ற இடத்தில் இருந்து செயிண்ட் பீட்டர் பர்க் நகருக்கு, “புல்போவோ” என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான டி.யு.-154 ரக ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 160 பயணிகளும் 11 ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் உக்ரைன் நாட்டின் வான் பகுதியில், 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து சென்ற போது, “விமானத்தில் தீ பிடித்து விட்டது” என்று விமானி, தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, அவசர செய்தி அனுப்பினார். அதன் பின் அந்த விமானம் ராடர் திரையில் இருந்து மறைந்து விட்டது.
30 உடல்கள்
இந்த நிலையில் அந்த விமானம், உக்ரைன் நாட்டில் உள்ள டோனிஸ்டிக் என்ற நகரம் அருகே நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம், நெருப்பு கோளம் போல எரிந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
விமானம் விழுந்த இடத்துக்கு ஹெலிகாப்டர்களில் மீட்பு குழுவினர் விரைந்தனர். அங்கு விமானம் சிதைந்து கிடந்தது. பயணிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அடையாளம் காணும் அளவில் இருந்த 30 உடல்கள் மீட்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
171 பேர் சாவு
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 171 பேரும் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “விமானத்தை அவசரமாக தரை இறக்க விமானி முயன்றார். ஆனால் முடியவில்லை. விமானம் விழுந்து நொறுங்கி விட்டது” என்றார்.
விபத்துக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே நடந்த விபத்துக்கள்
கடந்த மே மாதம், ரஷியாவில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த விமானம், சோச்சி என்ற இடத்தில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் 113 பேர் இறந்தனர். ஜுலை மாதம், சிபிர் ஏர்லைன்சின் ஏர் பஸ் விமானம் இர்குட்ஸ்க் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெடித்து சிதறியது. இதில் 122 பேர் உடல் கருகி இறந்தனர்.
நேற்று நடந்த விபத்தில் 171 பேர் இறந்து இருக்கிறார்கள். இது இந்த ஆண்டில் நடந்த 3-வது பெரிய விபத்து ஆகும்.