விக்டோரியா அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு….!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான திரைப்பட நடிகை ரோகிணி, இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், வசந்த் மற்றும் ராஜீமுருகன் ஆகியோர் சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேற்று வந்தனர். அங்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திக்கேயனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் “தமிழ் திரைப்படத்துக்கு இந்தாண்டு நூறாவது ஆண்டாகும் சென்னையில் முதன்முதலில் 1897-ம் ஆண்டு விக்டோரியா பொது அரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் திரைப்பட நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ரிப்பன் மாளிகை அருகேயுள்ள விக்டோரியா பொது அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக உருவாக்க வேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னர் நிருபர்களிடம் நடிகை ரோகிணி கூறியதாவது:-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா ஒரு வருட காலத்துக்கு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி விக்டோரியா பொது அரங்கு தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating