தோழிகளிடம் பேனா, பென்சிலை கொடுத்து விட்டு 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை…!!
தர்மபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது மகள் தர்ஷினி (வயது 11). இவர் அதகபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தர்ஷினி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் தீ அவரது உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தர்ஷினி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பெற்றோர், ஆசிரியர், சக தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தர்ஷினி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்ற தர்ஷினி யாரிடமும் பேசாமல் மிகவும் சோகமாக இருந்தார். அப்போது சகதோழிகளிடம் நாளை முதல் நான் பள்ளிக்கூடம் வரமாட்டேன் என்று கூறினார்.
பின்னர் தன்னிடம் இருந்த பேனா, பென்சில்களை தனது தோழிகளுக்கு கொடுத்தார். அப்போது எதற்காக பேனா, பென்சில்களை எங்களிடம் கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது தோழிகளுக்கு தெரியவில்லை.
பள்ளி முடிந்து மாலை அவர் வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.
தர்ஷினி இறந்தது குறித்து தகவலறிந்த பள்ளி தோழிகள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். சகதோழிகள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating