ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்… லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை தொடர்ந்து, அதிகாலை ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கண்ணீர் மல்க காத்திருந்த லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Average Rating