எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 2 பேர் பலி..!!
பீகாரின் ராஜேந்திர நகரில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி செல்லும் தலைநகர் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சமுக்தலா ரெயில் நிலையம் அருகே 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்த இந்த ரெயில் திடீரென தடம்புரண்டது. ரெயிலின் என்ஜின் மற்றும் அதற்கு அடுத்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்துக்குள்ளாகின.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அலிபுர்துவார் மண்டல ரெயில்வே மேலாளர் சஞ்சீவ் கிஷோர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மருத்துவக்குழு மற்றும் உபகரணங்களுடன் மீட்பு ரெயில் ஒன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது.
சமுக்தலா ரெயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வழிவிடுவதற்காக, தலைநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி வைப்பதற்கு சிக்னல் போடப்பட்டு இருந்தது. ஆனால் சிக்னலை கவனிக்காமல் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.
Average Rating