ஜெயலலிதா சமாதியில் மணக்கோலத்தில் புதுமண தம்பதி அஞ்சலி..!!
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேலூர் குப்பம் அ.தி.மு.க. கிளை அவைத்தலைவராக இருப்பவர் கார்த்திக் (வயது 27). கார் டிரைவரான இவருக்கும் சிநேகா (26) என்ற பெண்ணுக்கும் சென்னை பெசன்ட்நகர் மாதா கோவிலில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் அவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். வரிசையில் நின்று ஜெயலலிதா சமாதியில் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி அஞ்சலி செலுத்த வந்தவர்களை நெகிழ செய்தது.
திருமணம் முடிந்தவுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்தது ஏன்? என்பது குறித்து கார்த்திக் உருக்கமாக கூறியதாவது:-
நானும், சிநேகாவும் 7 ஆண்டுகள் காதலித்தோம். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6-ந்தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தோம். இந்தநிலையில் முதல்- அமைச்சர் அம்மா (ஜெயலலிதா) மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
திருமணத்தை ரத்து செய்துவிட்டு அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டோம்.
அம்மா உயிருடன் இருந்திருந்தால் திருமணம் முடிந்தவுடன் அவரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. தற்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும், அவருடைய ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருமணம் முடிந்த கையோடு அஞ்சலி செலுத்த வந்தேன்.
எங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் தீவிர அ.தி.மு.க. விசுவாசிகள். பெங்களூரு சிறையில் அம்மா அடைக்கப்பட்டிருந்த போது, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு என்னுடைய தந்தை முனியசாமி இறந்து போனார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மணக்கோலத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்த புதுமண தம்பதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் வாழ்த்துக் கூறிவிட்டு சென்றனர்.
Average Rating