மது குடிக்க பணம் கொடுக்காததால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்…!!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேம்பாயி (வயது80). இவருக்கு கலியமூர்த்தி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவி மற்றும் மகன், மகள்களுடன் இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கலியமூர்த்தியின் மகன் கலைவாணன் (வயது36) நேற்று மாலையில் பாட்டி வேம்பாயிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் எதுவும் இல்லாததால் தர முடியாது என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலைவாணன் சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்பை எடுத்து வேம்பாயின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் வேம்பாயின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் வேம்பாயி மயங்கி கீழே சாய்ந்தார். வலியால் அலறி துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் உயிருக்கு போராடியபடி கிடந்த வேம்பாயியை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் மண்டை உடைந்து ரத்தம் அதிகம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வேம்பாயி பரிதாபமாக இறந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபர் கலைவாணனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், வாலிபர் கலைவாணன் சற்று மனதால் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. அவர் அடிக்கடி வேம்பாயிடம் மது குடிக்க பணம் கேட்பார். இதேப்போல் நேற்றும் மது குடிக்க பணம் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கலைவாணன் தனது பாட்டி என்றும் பாராமல் அவரை அடித்து கொன்றுள்ளார் என்று கூறினர்.
குடிக்க பணம் கொடுக்காததால் பேரனே பாட்டியை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating