முன்விரோத தகராறு: கோவில் தர்மக்கர்த்தாவின் காதை கடித்து துப்பிய ஆசாமி…!!
ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி கிராமம் பச்ச பாளிபுதுரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் தர்மக்கர்த்தா ஆகவும் இருந்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை நடந்தது. சாமி வழிபாடு முடிந்த நிலையில் கோவில் தர்மக்கர்த்தா சுந்தர் ராஜ் திருநீரை வைத்துக் கொள்வதற்கு முன்னதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்றும் சிலரும் சாமி திருநீரை எடுத்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது இதைத் தட்டிக்கேட்ட தர்மகர்த்தா சுந்தர்ராஜுக்கும் அவரது நெருங்கிய உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று (புதன்கிழமை) இரவு சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்று அங்கிருந்த சுந்தர்ராஜின் மனைவி மீனாட்சி, மகன் ஜெகதீஸ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த மீனாட்சி மற்றும் ஜெகதீஸ் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக சுந்தர்ராஜ் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். இதையறிந்த எதிர்ப்பாளர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அப்போது சுந்தர்ராஜுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் சுந்தர்ராஜின் இடது பக்க காதை கடித்து துண்டாக்கினார். இதில் சுந்தர்ராஜின் காதில் இருந்து ரத்தம் கொட்டியது. இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
அப்போது சுந்தர்ராஜ் தனது காதை நெருங்கிய உறவினரின் தூண்டுதல் பேரில் ஒருவர் கடித்து துண்டாக்கிவிட்டதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். காது துண்டான சுந்தர்ராஜ் துண்டிக்கப்பட்ட காதுடன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரவு நேரத்தில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating