காசிமேட்டில் மீனவர் வெட்டி படுகொலை: போலீசார் விசாரணை…!!
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரபு (34) மீனவர். இவர் மீது காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசில் அடிதடி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பிரபு நேற்று இரவு 9 மணி அளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கியது. அதை பார்த்ததும் பிரபு ஓட தொடங்கினார். அந்த மர்ம கும்பல் அவரை விரட்டி சென்றது. பின்னர் பிரபுவை வழி மறித்து சரமாரியாக வெட்டியது.
இதில் பிரபுவின் கை, கால், கழுத்தில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். உடனே அந்த மர்ம கும்பல் ஆட்டோவில் தப்பி சென்றது.
தகவல் அறிந்ததும் காசிமேடு மீன் பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரபு இறந்தார்.
இதுகுறித்து காசிமேடு துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பிரபுவுக்கும் திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும் அவர்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவை தீர்த்து கட்டியதும் தெரியவந்தது.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வெட்டி படுகொலை செய்யப்பட்ட பிரபுவுக்கு சோபியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Average Rating