கோவையில் 2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: போலீசார் விசாரணை…!!
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது விரிவாக்க வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 85).
இவர்களுக்கு தெய்வானை என்ற ஒரே மகள் உள்ளார். இவரது கணவர் முருகேசன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமாக 2 மேன்சன்களும், அடுத்தடுத்து வரிசையாக 6 ஓட்டு வீடுகளும் உள்ளன. கணவர் மறைவுக்கு பின் பழனியம்மாள் தனது மகள் தெய்வானை பராமரிப்பில் இருந்து வந்தார். சமீப காலமாக பழனியம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை ஓட்டு வீட்டில் தங்க வைத்திருந்தனர்.
இன்று காலை பழனியம்மாளை பார்ப்பதற்காக அவரது பேரன் கருணாகரன் சென்றார். அங்கு வீட்டு கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்ற போது அங்கு பழனியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது கழுத்து துணியால் இறுக்கப்பட்டு இருந்தது. அருகில் வசிக்கும் தனது தாய் தெய்வானையிடம் சம்பவத்தை கூற அவர் கதறி அழுதபடி வீட்டுக்கு ஓடி சென்றார். தகவலறிந்து அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
சம்பவஇடத்துக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பழனியம்மாள் கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. பழனியம்மாளை கழுத்தை நெரித்த போது அவர் திமிறியதற்கான அடையாளங்களும் தென்பட்டன. எனவே நகைக்காக இந்த கொலை நடந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதேநேரம் அவர் காதில் அணிந்திருந்த கம்மல் அப்படியே இருந்தது.
பழனியம்மாள் உடலை மோப்பம் பிடித்த நாய் வீட்டில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி அங்குள்ள சுடுகாடு பகுதியை சுற்றி சுற்றி வந்தது. சம்பவஇடத்தில் இருந்து கைரேகைகளையும் பதிவு செய்தனர்.
கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அடுத்தடுத்து வீடுகள் உள்ள பகுதியிலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating