திருவனந்தபுரம் அருகே 14-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி…!!
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சஜித்.
வியாபாரியான இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மேகா (வயது 23) இந்த தம்பதிக்கு 1½ வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளான்.
நேற்று மேகா தனது வீட்டு பால்கனியில் நின்று ஜன்னலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பால்கனியின் வாசல் கதவு தானாக மூடிக் கொண்டது.
இந்த நேரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சஞ்சய் விழித்துக் கொண்டு அழ தொடங்கினான். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கதவை திறக்க மேகா முயற்சி செய்தார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை.
இதனால் அவர், பால்கனியின் அருகே உள்ள ஜன்னலை திறந்து வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்தார். அப்போது அவர் கால்தவறி 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.
இதைப்பார்த்ததும் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் சஜித்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவை உடைத்து குழந்தை சஜ்சயை மீட்டனர்.
குழந்தையை காப்பாற்ற முயன்று 14-வது மாடியில் இருந்து விழுந்து பலியான மேகாவின் உடலை பார்த்து அவரது கணவர் கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது.
Average Rating