முத்துப்பேட்டை அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது..!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யாறு (52) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் உள்ள ஏரிக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது.
ஆற்றில் தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் பயிர்கள் கருக தொடங்கியது. அதனால் அருகில் இருந்த தம்பிக்கோட்டை ஏரியிலிருந்து தண்ணீர் பாய்ச்ச அய்யாறு தரப்பினர் முயன்றனர். இதற்கு அந்த ஏரியை மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தனது காரில் வைத்திருந்த இரட்டை குழல் நாட்டுத் துப்பாக்கியால் அய்யாறு தரப்பினரை நோக்கி சுட்டார். இதில் அய்யாறு,சத்தியராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் ரவிச்சந்திரனுடன் வந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில் அய்யாறு தரப்பை சேர்ந்த அண்ணாத் துரை, திருமுருகன் என்கிற செல்வேந்திரன் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்ட ரவிச்சந்திரன் முத்துப்பேட்டை போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பாசன தண்ணீருக்காக துப்பாக்கி சூடு நடைபெற்று இருப்பது டெல்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating