குன்னூரில் மண்ணுக்குள் புதைந்து 4 பேர் பலி: கட்டிட உரிமையாளர்கள் உள்பட 8 பேர் கைது…!!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரன்சி பகுதியில்100 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை அழித்து, புதிதாக தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு தடுப்புச்சுவரும் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே, கீழ் பகுதியில், கட்டிடம் கட்ட அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் கொட்டாம்பட்டி தாலுகா, குழிமனத்தம் கிராமத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, 5 தொழிலாளர்கள் புதைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஊழியர்களின் 5 மணி நேர போராட்டத்துக்குப்பின், காமராஜ், (வயது 26), கார்த்திகேயன், (22), ஆறுமுகம், (48), பிரதாப் (20) ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
ஜனகர் (24) என்ற தொழிலாளி காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அவர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்தில் பலியான 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நீலகிரி கலெக்டர் சங்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, செங்குத்தான மேடு போன்ற பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது குறித்து, எடப்பள்ளி ஊராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். சம்பவம் குறித்து, மேல் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவ நடந்த இடம் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியாகும். சுற்றுச்சுவர் கட்ட உரிய உரிமைகள் பெறப்படவில்லை. இது தவிர இந்த இடம் விவசாய நிலப்பகுதியாகும்.
விதிமுறை மீறியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததாலும் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து கட்டிட உரிமையாளர்கள் தினேஷ், ஹரிகரன் மற்றும் மரியதாஸ், ஜீனேஷ், கார்த்திகேயன், ராஜா, ஜெய்குமார், ரஞ்சித் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கட்டிட காண்டிராக்டர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating