கோவில் உண்டியலை கொள்ளையடிக்க முயன்ற ஈரோடு கொள்ளையனை அடித்துக்கொன்ற மக்கள்..!!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரபாளையம் சுண்டமேட்டில் அன்னமார் கோவில் உள்ளது. 65 ஆண்டாக செயல்படும் இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். தினமும் கோவிலுக்கு அப்பகுதி மக்கள் சென்று வழிபடுவார்கள்.
இந்த கோவிலில் கருப்பசாமி, கன்னிமார், முனியப்பன்சாமி மற்றும் நாகர்சாமிகள் உள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவில் உள்ளே இருந்து சத்தம் கேட்டது. உண்டியலை உடைப்பதுபோல் சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த நேரத்தில் கோவில் உள்ள என்ன சத்தம்? என்று சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தனர்.
உள்ளே 2 ஆசாமிகள் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க உடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கு மேலும் பல பொதுமக்கள் ஓடி வந்தனர்.
ஊர்மக்கள் திரண்டு வருதை கண்ட கொள்ளையர்கள் 2 பேரும் உண்டியலை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை விடாமல் பொதுமக்களும் விரட்டினர்.
காட்டு வழியாக அவர்கள் ஓடும் போது ஒரு கொள்ளையன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டான். இதில் பலத்த அடிபட்ட அவனால் எழுந்து தப்பி ஓட முடியவில்லை.
இதற்கிடையே விரட்டி வந்த பொதுமக்கள் அருகே வந்து அவனை பிடித்து கொண்டனர். மற்றொரு கொள்ளையன் இருளில் ஓடி தப்பிவிட்டான்.
பிடிபட்ட கொள்ளையனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். சரமாரியாக அடி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை அப்பகுதி மக்கள் சிலர் மீட்டு பவானிஅரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணையில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் சி.எம்.நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46) என்றும் திருமணமாகி மனைவியும் 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர் எனவும் தெரியவந்தது.
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating