கத்தியால் குத்தி வாலிபர் கொலை: பிளஸ் -1 மாணவர் உள்பட 3 பேர் கைது…!!
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்கு சர்மிளா என்ற 2 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மகா லட்சுமி, கணவரை பிரிந்து கோட்டூரில் உள்ள தந்தை மாசாணி வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் நேற்று மாமனார் வீட்டுக்கு மனைவியை பார்ப்பதற்காக கார்த்திகேயன் சென்றார். அங்கு மாமனார் மாசாணியின் தம்பி முருகன்(48) இருந்தார். அவரிடம் கார்த்திகேயன், மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்து இருப்பதாக தெரிவித்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் முருகனுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிதுநேரத்துக்கு பின் கார்த்திகேயன் அங்கிருந்து சென்று விட்டார். இதைதொடர்ந்து கார்த்திகேயன் தனது மனைவியின் தம்பி எம். கார்த்திகேயனை அழைத்து கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது முருகனுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன், அவரது மகன் திலிப் (18) மற்றும் 14 வயதுடைய இளைய மகன் ஆகியோர் கத்தியால் கார்த்திகேயனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எம்.கார்த்திகேயன் அக்காள் கணவரை காப்பாற்ற முயன்ற போது அவரையும் இரும்பு கம்பியால் குத்தினர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் ஆனைமலை போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி எம். கார்த்திகேயனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலையுண்ட கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய மாமனார் முருகன், அவரது மகன்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் திலிப் கூலி வேலை செய்து வருகிறார். இளைய மகன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating