நத்தம் அருகே பழனிக்கு பாத யாத்திரை வந்த தந்தை-மகன் பஸ்மோதி பலி…!!
காரைக்குடியை சேர்ந்த முருக பக்தர்கள் சிலர் பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராபட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த பஸ் சாலையோரம் நடந்து வந்த பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன்(வயது55) சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் முத்துமெய்யப்பன்(30) ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயமடைந்த அபிராமி(57), நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வர தொடங்கியுள்ளனர். நேற்றும் இதேபோன்று பழனி அருகே பாத யாத்திரை வந்த பக்தர் வாகனம் மோதி பலியானார்.
பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதரவேண்டும். முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating