களியக்காவிளை அருகே மது போதை தகராறில் வாலிபர் அடித்து கொலை: நண்பர் வெறிச்செயல்…!!
களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை தூசி குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக பளுகல் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் பரத், ஏட்டு பாபுராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் பளுகல் மேல் பாளையை சேர்ந்த சிபின் (வயது 26) என்பது தெரியவந்தது.
அவரது உடலிலும் காயங்கள் இருந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 24-ந்தேதி பாறசாலை ஆலம் பாறையை சேர்ந்த சுமன்ஜித்து (21) என்பவர் சிபினை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆலம்பாறைக்கு சென்று சுமன்ஜித்துவை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சிபினை அடித்து குளத்தில் தூக்கிப் போட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சிபினின் தம்பி சிஞ்மோன் கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுமன்ஜித்துவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இருவரும் நண்பர்கள். கட்டிட வேலை செய்து வருகிறோம். கடந்த 24-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் விதத்தில் மது அருந்த முடிவு செய்தோம்.
இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி விட்டு தூசிகுளத்தின் கரையில் இருந்து மது அருந்தினோம். மது அருந்திக்கொண்டிருந்த போது நாங்கள் வாங்கி வைத்திருந்த ஒரு மது பாட்டிலை காணவில்லை. இது குறித்து நான் சிபினிடம் கேட்டேன், அப்போது எங்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் அந்த பகுதியில் கிடந்த விறகு கட்டையால் சிபினை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலை தடுமாறி சிபின் கீழே விழுந்தார். உடனே நான் அவரை குளத்திற்குள் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுவிட்டேன். அவர் இறந்திருப்பார் என்று நினைக்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating