அதிபர் மகிந்தா ராஜபக்சே கூட்டரசில் 2 தமிழர் கட்சிகள் இணைந்தன!
சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் தமிழர் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மக்கள் முன்னணியும் இணைந்துள்ளதையடுத்து அக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளனர்! சிறிலங்க நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டைமான், இளைஞர் அதிகாரமயமாக்கல் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவர் கட்சியைச் சேர்ந்த மேலும் 2 உறுப்பினர்கள் துணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் சந்திரசேகரன், சமூக மேம்பாடு மற்றும் சமூக சமமின்மை ஒழிப்புத் துறைகளின் அமைச்சராகியுள்ளார்.
அதிபர் தேர்தல் இவ்விரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு கட்சிகளும் இணைந்ததையடுத்து ராஜபக்சே கூட்டணியின் பலம் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 126 ஆக உயர்ந்துள்ளது.