செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்…!!
செங்கல்பட்டு டவுன் திருப்போரூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பலராமன். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார்.
நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டு கதவை தட்டி பலராமனை அழைத்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனே கொலை வெறி கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கேளம்பாக்கம் அருகே காரில் சென்ற கொலை வெறி கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களில் 3 பேர் சிக்கினர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் வல்லத்தை சேர்ந்த பூபதி, பாம் குணா, மேடவாக்கம் சரவணன் என்பது தெரிந்தது. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது பாம் குணா, சரவணனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அவர்கள் 2 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன் விரோதத்தில் பலராமனை தீர்த்துக்கட்ட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating