கணவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் கண்ணீர் மனு…!!
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண்மை குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதிஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஈரோடு வளையகார வீதியை சேர்ந்த மஞ்சுளா (வயது20) என்ற இளம்பெண் கைக்குழந்தையுடன் வந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் கணவர் பெயர் அருணாச்சலம். நாங்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது.
என் கணவர் மெக்கானிக் வேலை பார்க்கிறார். ஈரோடு தாலுகா போலீசார் என் கணவரை செயின் பறிப்பு வழக்கில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரை சப்-ஜெயிலில் அடைத்து வைத்து உள்ளனர்.
என் கணவர் ஒரு அப்பாவி, அவர் திருடவில்லை. மெக்கானிக் வேலைக்கு தான் போய் வருகிறார். வேண்டும் என்றே அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளனர். என் கணவரை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் உருக்கமாக கூறியுள்ளார்.
மனுவை வாங்கி படித்த கலெக்டர் பிரபாகர் ‘‘உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கிறேன். தற்போது போலீஸ் டி.எஸ்.பி. வருவார் அவரிடம் சொல்கிறேன்’’ என்று கூறினார்.
Average Rating