ஆறுமுகநேரியில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு…!!
ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான இவரது மகள் பாலசுந்தரி (வயது 27). இவருக்கும், ஆத்தூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சென்னை வண்டலூர் அருகே உள்ள கண்டிகையில் பாத்திரக்கடை நடத்தி வரும் மாதவன், அங்கு மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாலசுந்தரி கர்ப்பமானார். இதையடுத்து அவரை பெரியான்விளையில் அவரது தாய் வீட்டிற்கு மாதவன் அனுப்பி வைத்தார்.
பாலசுந்தரிக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க மாதவன் உடனே வரவில்லையாம். இதனால் பாலசுந்தரி மனவேதனையில் இருந்துள்ளார். இது குறித்து தனது உறவினர்களிடம் அவர் வருத்தப்பட்டுள்ளார். அவர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும் அவர் சமாதானம் அடையாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த பாலசுந்தரி, தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தன்மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அவருடன் சேர்ந்து குழந்தையும் கருகியது. தீயின் வெப்பத்தில் அலறிய பாலசுந்தரியையும், அவரது குழந்தையையும் வீட்டில் இருந்த உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் குழந்தை இறந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாலசுந்தரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating